பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், தூய்மையை வலியுறுத்தும் வகையில் "பிளாக்கிங்' எனப்படும் உடற்பயிற்சி போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சி சார்பில் தூய்மையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களின் பங்களிப்புடன் பொது இடங்களைத் தூய்மையாகப் பராமரிக்க பிளாக்கிங் எனப்படும் உடற்பயிற்சி முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி, நின்று, குனிந்து பல்வேறு நிலைகளில் உடற்பயிற்சி முறைகள் மூலம் குப்பைகளைச் சேகரிக்க வேண்டும். "சென்னை பிளாக்கிங் சவால் -2019' என்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டி பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் உள்ள காவல் சாவடியின்அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். கட்டணம் ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.