தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடந்த தேசிய லோக் அதாலத்தில், ரூ.394 கோடியே 7 லட்சம் மதிப்பிலான 63 ஆயிரத்து 869 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, 2019-ஆம் ஆண்டு மார்ச், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடத்த தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு முடிவு செய்தது. இந்த வகையில் சனிக்கிழமை (ஜூலை 13), தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் ராஜசேகர் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகள், மதுரைக் கிளையில் ஆறு அமர்வுகள் உள்பட மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 467 அமர்வுகளில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 44 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், 56 ஆயிரத்து 554 நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள், 7,243 நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள், 72 உயர்நீதிமன்ற வழக்குகள் என மொத்தம் ரூ.394 கோடியே 7 லட்சத்து 40 ஆயிரத்து 853 மதிப்பிலான 63 ஆயிரத்து 869 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது என்றார் அவர்.