ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புறநோயாளிகள் சிகிச்சையை வியாழக்கிழமை (ஜூலை 18) புறக்கணிக்கப் போவதாக அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது. மருத்துவ பட்டமேற்படிப்பு முடித்தவர்களை கலந்தாய்வு மூலம் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும்.
மருத்துவ பட்டமேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாள்களாக அடையாளப் போராட்டங்களை முன்னெடுத்தோம். அதற்கும் எந்த பலனும் இல்லை.
இந்தச் சூழலில்தான் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுகாதாரத் துறை மானிய கோரிக்கையில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சில அறிவிப்புகள் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்த்தோம். ஆனால், அதிலும் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதையடுத்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வரும் 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையை 2 மணி நேரம் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.