தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தின்படி, மாதவரத்தில் கடந்த மூன்று நாள்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தெரு நாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அவற்றால் ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்கவும் மாநகராட்சியின் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, மாநகராட்சியின் 15 மண்டலங்களில் தெருக்கள் வாரியாக அண்மையில் நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 57,300 தெரு நாய்கள் இருப்பது தெரியவந்தது. இந்த தெரு நாய்களுக்கு ரூ. 77 லட்சம் மதிப்பில் ரேபிஸ் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டம் மாதவரம் மண்டலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) தொடங்கப்பட்டது. முதல்நாளில்1,050 தெரு நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாள்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், தெருவாரியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தில் ஒரு கால்நடை மருத்துவர், 4 நாய் பிடிக்கும் பணியாளர்கள், ஒரு உதவியாளர் கொண்ட 7 பேர் உள்ளனர். ஒவ்வொரு குழுவும் ஒருநாளைக்கு 150 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவர். தடுப்பூசி போடப்பட்ட நாய்களைக் கண்டறியும் வகையில் அவற்றின் மீது தற்காலிக வர்ணம் பூசப்படும். அனைத்து மண்டலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றனர்.