செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு விரைவில் முழுநேர இயக்குநர் நியமிக்கப்படுவார் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடைபெற்ற விவாதம்:
தங்கம் தென்னரசு (திமுக): செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இதுவரை இயக்குநரை நியமிக்கவில்லை. இதன் தலைவராக முதல்வர் உள்ளார். 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை அதனுடைய நிர்வாக குழுக் கூட்டத்தை ஒருமுறை மட்டுமே கூட்டியுள்ளனர். ஓராண்டுக்கு முன்பாகவே இயக்குநரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தபோது நடவடிக்கை எடுக்கப்படும் என்றீர்கள். இதுவரை எடுக்கவில்லை. பொறுப்பு இயக்குநரை மட்டும் நியமித்து எப்படியாவது அந்த நிறுவனத்துக்கு மூடுவிழா நடத்த வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளீர்கள்.
அமைச்சர் பாண்டியராஜன்: திமுக ஆட்சிக் காலத்தில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி வரை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியது. இப்போது ஆண்டுக்கு ரூ.6 கோடி முதல் ரூ.7 கோடி வரை ஒதுக்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் தனியாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை இணைக்க முயற்சிகள் நடைபெற்ற போது அது தடுத்து நிறுத்தப்பட்டது. மூடுவிழா நடத்த வேண்டுமென நினைத்தால் அதனை இணைத்திருக்கலாம். ஆனால், அதனைச் செய்யாமல் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறோம். இதற்கு இயக்குநரை நியமிக்க விளம்பரம் கொடுக்கப்பட்டு அரசு அதிகாரி எஸ்.கே.பிரபாகர் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. 15 பேர் வரை மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். இயக்குநரை நியமிப்பதற்கான நடைமுறைகள் 6 மாதங்களுக்குள் முழுமை அடைய வேண்டும். ஆனால், அந்த கால அவகாசம் கடந்து விட்டதால் மீண்டும் விளம்பரம் வெளியிடப்பட்டு புதிய இயக்குநர் நியமிக்கப்படுவார். இயக்குநர் நியமிக்கப்படாவிட்டாலும் அதனுடைய பணிகளில் எந்தத் தடையும் இல்லை என்றார்.