சென்னையில் நடைபெற்ற நாணயக் கண்காட்சியில் ராஜ ராஜ சோழனின் பெயர் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் காட்சிப்படுத்தப்பட்டது.
சென்னை நாணயவியல் கழகம் சார்பில் 3 நாள்கள் நாணயக் கண்காட்சி சென்னை சாலிகிராமத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்ட 50 -க்கும் மேற்பட்ட நாணய விற்பனையாளர்கள், நாணய சேமிப்பாளர்கள் தாங்கள் சேகரித்த நாணயம், ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்ட பல பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்தனர். இந்தக் கண்காட்சியின் தொடக்க நிகழ்வில், சோழ மன்னன் உடையார் ஸ்ரீ ராஜராஜத் தேவரின் பெயரான ராஜ உடையார் என்று பொறிக்கப்பட்ட தங்க நாணயம் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த நாணயத்தின் முன் பக்கத்தில் வலது காலைத் தூக்கிய கம்பீரமான புலியும், அதன் இரு புறங்களிலும் அலங்கார விளக்கும், ராஜ வெண்கொற்றக்குடையும் இடம்பெற்று இருந்தது. நாணயத்தின் பின்பக்கத்தில் ராஜ உடை' என எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை நாணயவியல் கழகத் தலைவர் மணிகண்டன் கூறியது: சுமார் 360 மில்லி கிராம் எடை கொண்ட இந்த நாணயம், தஞ்சை மாவட்ட நாணய சேகரிப்பாளரின் மூலம் எனக்கு கிடைத்தது.
ராஜ ராஜத்தேவரின் ராஜ உடையார் என்னும் பெயரில் ராஜ உடை என்ற எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. நாணயம் சிறியதாக இருப்பதால் யார் என்ற எழுத்துகள் இடம்பெறவில்லை என கருத முடிகிறது என்றார்.