சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பறவைகளை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் காணும் வகையில் உயர்கோபுரம், அதிநவீன தொலைநோக்கியுடன் கூடிய பிரத்யேக இடமும், பறவைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் பலகையும் வனத் துறை சார்பில் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பகுதி இந்தியாவில் உள்ள 93 சதுப்பு நிலங்களில் நகர்ப்புறத்தில் அமைந்துள்ள சதுப்பு நிலமாகும். வேளச்சேரி சாலை, துரைப்பாக்கம் ரேடியல் சாலை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மேட்டுக்குப்பம், காரப்பாக்கம், பெரும்பாக்கம் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் இந்த சதுப்பு நிலம் அமைந்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வாழ்விடமாகக் கொண்ட 150-க்கும் மேற்பட்ட பறவை இனங்களும், 54 வலசை வரும் பறவை இனங்களும் இங்கு உள்ளன. இந்த சதுப்பு நிலத்துக்கு ஆண்டொன்றுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்வதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பறவைகளின் புகழிடமாகத் திகழும் பள்ளிக்கரணையை மேம்படுத்தவும், பறவைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் வனத் துறை சார்பில் கடந்த 2018-இல் ரூ. 20 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டன. இதில், முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து சென்னை மாவட்ட வன அலுவலர் சுப்பையா கூறியது: வேளச்சேரி சாலையில் உள்ள தேசிய காற்றாலை மின்சக்தி நிறுவனம் அருகில் உயர்கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் கோபுரத்தில் இருந்து பொதுமக்கள் பறவைகளைக் காணும் வகையில் அதிநவீன தொலைநோக்கிகள், அதிக தொலைவில் உள்ள பறவைகளைத் துல்லியமாக காணும் "ஸ்பாட் ஸ்கோப்' கருவி ஆகியவை வாங்கப்பட உள்ளன. இப்பகுதியில் இருக்கையுடன் கூடிய நடைப்பயிற்சி பாதை, பூங்கா ஆகியவை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இங்கு புங்கன், வேம்பு, நீர்மத்தி ஆகிய சதுப்பு நிலத்துக்கு ஏற்ற மரங்கள் நடப்பட்டுள்ளன. இதற்கான நுழைவுக் கட்டணம் குறித்து அரசுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.
வேளச்சேரி சாலையில் மேம்பாலத்துக்கு கீழே பறவைகள் குறித்து டிஜிட்டல் பலகை வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அதைவிட பெரிய அளவில் தேசிய கடல் ஆராய்ச்சி நிலையம் அருகே டிஜிட்டல் பலகை வைக்கப்பட உள்ளது. இந்த டிஜிட்டல் பலகையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் குறித்த சிறப்புகள், இங்கு வலசை வரும் பறவைகள், இருப்பிடப் பறவைகள் குறித்த விவரங்கள் இடம்பெறும். இதன் மூலம், பறவைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும் என்றார்.