கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடத்துக்கு நடந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வரும் 17 -ஆம் தேதியிலிருந்து சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது.
இதுகுறித்த டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் விவரம்: தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியிடத்தில் 30 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடந்தது. இதன்படி, 70 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதேபோன்று கருவூல மற்றும் கணக்குத் துறையின் அலுவலர் பதவி (4), தொழில் மற்றும் வணிகத் துறைக்கான ரசாயனர் பதவி (2), சீர்திருத்தப் பள்ளிகள் மற்றும் விழிப்புப்பணி நிறுவனங்களுக்கான உதவி கண்காணிப்பாளர் பதவி (4) ஆகியவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் வரும் 17-இல் தொடங்கி 24-இல் நிறைவடைவதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.