சென்னையில் பிரபல ஜவுளிக் கடையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட தில்லியைச் சேர்ந்த 4 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் செவ்வாய்க்கிழமை சிலர் விலை உயர்ந்த பட்டுச் சேலைகளைத் திருடிவிட்டு தப்பியோட முயன்றனர்.
இதை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்த அந்தக் கடை ஊழியர்கள், அந்த நபர்களைக் கையும் களவுமாகப் பிடித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீஸார் அவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், தில்லி சுலைமான் நகரைச் சேர்ந்த மோ.ராம்குமார் (40), தில்லி மங்கோல்புரியைச் சேர்ந்த ம.ரிங்குசிங் (35), கு.பீனா (53),ரா.ஜோதி (48), வி.சுனிதா (26),ரா.தீபாஞ்சலி (21) என்பதும், அவர்கள் தில்லியில் இருந்து சென்னைக்கு திருடுவதற்கு காரில் வந்திருப்பதும், தியாகராயநகரில் உள்ள ஜவுளிக்
கடைகளில் பட்டுச் சேலைகளைத் தொடர்ச்சியாக திருடி வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீஸார், அவர்கள் திருடி வைத்திருந்த ரூ.3 லட்சத்து 63,379 மதிப்புள்ள 6 பட்டுச் சேலைகள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, 6 பேரையும் கைது செய்தனர்.