சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

தண்டையார்பேட்டையில் சரக்கு ரயில் ஒன்று வியாழக்கிழமை தடம் புரண்டதால் சென்னை-கும்மிடிபூண்டி இடையே இரு மார்க்கத்திலும் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


தண்டையார்பேட்டையில் சரக்கு ரயில் ஒன்று வியாழக்கிழமை தடம் புரண்டதால் சென்னை-கும்மிடிபூண்டி இடையே இரு மார்க்கத்திலும் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
சென்னையில் தண்டையார்பேட்டையில் ரயில்வே யார்டு உள்ளது. இங்கு சரக்கு ரயில்கள், பயணிகள் ரயில்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் துறைமுகத்திலிருந்து கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு மதுரை செல்வதற்காக சரக்கு ரயில் ஒன்று தண்டையார்பேட்டையிலிருந்து வியாழக்கிழமை அதிகாலை சுமார் 4.30 மணியளவில் புறப்பட்டது. யார்டிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் வழக்கமான ரயில்பாதையில் இணைய முற்பட்டபோது   எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனையடுத்து சென்னை-கும்மிடிபூண்டி இடையே இருமார்க்கத்திலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
சென்னையிலிருந்து காட்ரா (காஷ்மீர்) நோக்கிச் செல்லும் அந்தமான் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேர வேண்டிய சர்கார் எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜி.டி. எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் கும்மிடிபூண்டியிலிருந்து திருவொற்றியூர் வரை ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த ரயில் பாதை சீரமைக்கும் சிறப்பு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடம் மாறிய ரயிலை சரியான பாதைக்கு கொண்டு வந்ததையடுத்து இப்பிரச்னை 
முடிவுக்கு வந்தது. இதனால் சுமார் இரண்டரை மணி நேரம் இருமார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயில் தடம் புரண்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com