வடசென்னை பகுதியில் உள்ள அனல் மின்நிலையங்களில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அனல் மின்நிலையத்தின் மொத்த உற்பத்தி திறன் 1,830 மெகாவாட் ஆகும். இங்கு ஒன்றாவது நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரமும், 2- ஆவது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு மூன்றாவது நிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையமும் தலா 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 அலகுகளாக அமைக்கப்பட உள்ளன. இதற்கான டெண்டர் பெல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த இரு அனல் மின் நிலையங்களுக்கும், மின்துறை அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை சென்ற அமைச்சர் தங்கமணி அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்தார். மேலும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தார். சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த ஆய்வில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் விக்ரம் கபூர், இணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் சுபோத்குமார், திட்ட இயக்குநர் கீதா ஆகியோர் உடனிருந்தனர்.