ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், பயனாளிகளை அடையாளம் காண சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தகுதியான ஒப்பந்தப் பணியாளர்கள், கூலி போர்ட்டர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
குறைந்த வருமானமுடையவர்களுக்கு கட்டணமின்றி மருத்துவ வசதி வழங்குவதற்காக தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டமாக பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ வசதிகள் பெற முடியும். இதன் மூலம், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இந்தத் திட்டத்தின்கீழ், இதுவரை 3.72 கோடி பலனாளிகளுக்கு மின் அட்டை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் மருத்துவ துறை சார்பில், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், கட்டணமில்லாத மருத்துவச் சேவை பெறுவதற்கான பயனாளிகளை அடையாளம் காணும் நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், ரயில் நிலைய ஒப்பந்த பணியாளர்கள், கூலி போர்ட்டர்கள் பங்கேற்றனர். அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர் தகுதியுடையவர்களுக்கு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது:
ஏழை, நடுத்தர, கிராமப்புற மக்கள், நகரத்தில் பணியாற்றும் தொழிலாளிகள் ஆகியோர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறமுடியும். ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ வசதிகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் 7 ரயில்வே மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தின்கீழ் பயன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை மருத்துவ இயக்குநர் நந்தா, மருத்துவ இயக்குநர் நிர்மலா தேவி, தலைமை மருத்துவ இயக்குநர் மூர்த்தி, சென்ட்ரல் ரயில்நிலைய இயக்குநர் குகநேசன், ரயில் நிலைய துப்புரவு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.