சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை பிற்பகல் நகரும் படிக்கட்டு அருகே சுவற்றின் பக்கத்தில் இருந்து 40 டைல்ஸ் கற்கள் விழுந்தன. எனினும், இந்த விபத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துவிட்டதோடு, பராமரிப்பு பணிக்காக டைல்ஸ் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோவில் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முக்கிய நிலையமாக விளங்குகிறது. இந்த ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு அருகே திங்கள்கிழமை பிற்பகலில் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் விழுந்தன. இதை ஊழியர்கள் பார்த்துள்ளனர். அந்த நேரத்தில் நகரும் படிக்கட்டை பயணிகள் யாரும் பயன்படுத்தவில்லை. இதனால், பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.
இது குறித்து மெட்ரோ ரயில்நிலையத்தில் ஊழியர் ஒருவர் கூறியது: இந்த சம்பவம் பிற்பகலில் நடந்தது. அந்த நேரத்தில் பயணிகள் யாரும் இல்லை. அதனால், அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது என்றார்.
இந்த சம்பவம் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பாக, 2019-ஆம் ஆண்டு மார்ச்சில் சுவற்றில் இருந்து இரண்டு டைல்ஸ் விழுந்தன. இதுபோல, ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் டைல்ஸ் விழுந்து ஒரு பெண் காயமடைந்தார். அவரது தலையில் 13 தையல் போடப்பட்டது. இதற்கிடையில், இந்தச் சம்பவத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துள்ளது. ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் முந்தைய அனுபவம் காரணமாக, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. சரியான பராமரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை சில டைல்ஸ்கள் நீக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.