சீர்மிகு நகரத் திட்டம்: சென்னைக்கு மத்திய அரசு ரூ.196 கோடி விடுவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் வளர்ச்சிப் பணிக்காக ரூ. 196 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் சீர்மிகு நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நகரங்களில் சென்னை மாநகரமும் ஒன்றாகும்.
இந்தத் திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியில் ரூ.947 கோடி மதிப்பில் 40 பணிகள் திட்டமிடப்பட்டு, இதுவரை ரூ.25 கோடி மதிப்பிலான 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக சென்னை மாநகர மக்கள் அடிப்படை வசதிகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் நம்ம சென்னை என்ற செயலி உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
28 பள்ளிகளில் மின்னணு வகுப்பறைகள், 8 பூங்காக்கள் மறுவடிவமைக்கப்பட்டுள்ளன. ரூ.491.86 கோடி மதிப்பிலான 22 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ரூ.191 கோடி மதிப்பிலான 4 திட்டங்கள் ஒப்பந்தம் கோரப்பட்டு பரிசீலனையில் உள்ளன.
இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு தன் பங்களிப்பாக ரூ.196 கோடியை விடுவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.