சைதாப்பேட்டை ரயில்நிலையம் அருகில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது , விரைவு ரயில் மோதி இளைஞர் உயிரிழந்தார்.
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் விரைவு ரயில் வழித்தடத்தில் திங்கள்கிழமை இரவு இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் மாம்பலம் ரயில்வே போலீஸார் விரைந்து வந்து, அந்த நபரின் சடலத்தை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், பிறகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில்,அந்த நபர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அல்லிப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகன் ஜீவா (22) என்பதும், இவர் தேனாம்பேட்டையில் உள்ள மதுக்கடை பாரில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர், சைதாப்பேட்டை அருகில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது, விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.