தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிவு
By DIN | Published On : 04th March 2019 04:06 AM | Last Updated : 04th March 2019 04:06 AM | அ+அ அ- |

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வெழுதிய 11,950 பேரில் 455 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பிலே தேர்ச்சி பெற வேண்டும். 2 ஆண்டுகள் நடத்தப்படும் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தநிலையில், கடந்த ஜூன் 2018-ஆம் ஆண்டில், அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்பட்ட தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாண்டு மற்றும் இரண்டாவது ஆண்டு தேர்வெழுதிய மாணவ , மாணவிகளின் தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அதில், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடும் சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து, அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியது: ஆசிரியர் பட்டயப் பயிற்சித் தேர்வை முதலாண்டு மாணவர்கள் 5,091 பேரும், 2-ஆம் ஆண்டு மாணவர்கள் 6,539 பேரும், தனித்தேர்வர்களாக 5,420 பேர் உள்பட மொத்தம் 17,050 பேர் எழுதினர். இவர்களில் 2-ஆம் ஆண்டு மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 11,950 மாணவர்களில், 455 மாணவர்கள் மட்டும் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயச் சான்று பெறத்தகுதிப் பெற்றுள்ளனர்.
கால தாமதம் ஏன்: கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணிகள் செப்டம்பர் மாதம் முடிந்து தேர்வு முடிவுகள் வெளியிடத் தயார் நிலையில் இருந்தபோது, ஒரு விடைத்தாளில், ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சிக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 50 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த விடைத்தாளை திருத்திய விரிவுரையாளர்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிச்சி நிறுவனத்திற்கு பரிந்துரை அளித்துள்ளோம். அதன் காரணமாகவே, விடைத்தாள்களை மீண்டும் திருத்தி, முடிவுகளை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டனர்.