பம்மல் செங்கழுநீர்மலை கல் குவாரி குட்டைகளில் தேங்கி இருக்கும் நீரை சுத்திகரித்து, பம்மல், அனகாபுத்தூர் நகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையை அடுத்த பம்மல் செங்கழுநீர்மலை பகுதியில் உள்ள 5 கல்குவாரிகளில் சுமார் 60 கோடி லிட்டர் தண்ணீர் தேங்கி உள்ளன. பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளில் சுமார் 1.8 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இரு நகராட்சிகளுக்கும் 80 லட்சம் லிட்டர் குடிநீர் தினசரி தேவைப்படுகிறது. இரு நகராட்சிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கென ஏரி, குளம் உள்ளிட்ட நீர் ஆதாரம் இல்லை. இரு நகராட்சிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கென ரூ 63 கோடி செலவில் தொடங்கப்பட்ட செம்பரம்பாக்கம் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், இரு நகராட்சிகளுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் சுமார் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. மொத்த தேவையில் 25 சதவீதம் மட்டுமே வழங்கப்படுவதால் இரு நகராட்சிப் பகுதிகளிலும் கடுமையான குடிநீர்த்தட்டுப்பாடு நிலவி வருகின்றது. தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலை உள்ளது. குவாரிகளில் தேங்கி உள்ள தண்ணீரை தூய்மைப்படுத்த ரூ. 6.5 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு, தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இது குறித்து, பம்மல் நகராட்சி பொறியாளர் யூ.சரவணன் கூறியது:
இந்த திட்டம் மூலம் பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிப் பகுதி மக்களுக்கு தினமும் சுமார் 25 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது. கல் குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான அனைத்து கட்டமைப்புப் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. கல்குவாரிகளில் தண்ணீர் இறைப்பதற்கென மிதக்கும் படகுகளில் செயல்படும் 5 ராட்சத மோட்டார் பம்புகள் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவை பொருத்தப்பட்டு கல்குவாரிகளில் இருந்து மேலே கொண்டு வரப்படும் தண்ணீர், நவீன தொழில்நுட்பம் மூலம் 6 முறை சுத்திகரிக்கப்பட்டு, குழாய்கள் மூலம் நீர்தேக்கத் தொட்டிகளில் சேமித்து, விநியோகிக்கப்பட உள்ளது என்றார்.