போலி என்கவுன்டர் வழக்கில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும், இந்த என்கவுன்டரை நிகழ்த்திய காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை தற்காலிக பணிநீக்கம் செய்யவும் தமிழக அரசுக்கு ,மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், பாண்டியன் நகர், தங்கமணி காலனியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. குற்ற வழக்கில் ஆஜராகாத காரணத்தால், சுந்தரமூர்த்திக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சிவகாசி அருகே திருத்தங்கலில் காமராஜர் சிலை அருகே நின்று கொண்டிருந்த சுந்தரமூர்த்தியை கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம், சிவகாசி நகர போலீஸார் கைது செய்தனர்.இதையடுத்து, சுந்தரமூர்த்தியின் உறவினர் கருத்தப்பாண்டியைத் தொடர்பு கொண்ட காவல்துறையினர், அவரை விடுவிக்க ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், சுந்தரமூர்த்தியின் குடும்பத்தார் பணம் தர மறுத்துவிட்டனர். அன்றைய தினம் இரவில் கருத்தப்பாண்டியைத் தொடர்பு கொண்ட போலீஸார், சுந்தரமூர்த்தி போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்தபோது, நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். தன் கணவர் போலி என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் சுந்தரமூர்த்தியின் மனைவி வசந்தி புகார் அளித்தார்.
ரூ. 10 லட்சம் இழப்பீடு: இந்த மனுவை விசாரித்த ,மாநில மனித ஆணைய உறுப்பினரான நீதிபதி துரை. ஜெயச்சந்திரன், தமிழக அரசுக்கு வியாழக்கிழமை அளித்த பரிந்துரையில், சுந்தரமூர்த்தி விவகாரத்தில் காவல்
துறையினரின் பதில்கள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இந்தச் சம்பவம் ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எனவே, உயிரிழந்த சுந்தரமூர்த்தியின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ .10 லட்சத்தை, ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும்.மேலும், இந்த என்கவுன்டரில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், காவலர்கள் காமராஜ், சிவா, நாகராஜ் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். சுந்தரமூர்த்தி மீதுள்ள வழக்குகளை முறையாக விசாரிக்காத சிபிசிஐடி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் குறிப்பிட்டுள்ளார்.