சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த தனியார் நிறுவன ஊழியரை, ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலர் மீட்டு, அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்தார்.
வேலூர் மாவட்டம் டி.சி.குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தீபன்(58). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் நிலையில், வேலூர் செல்வதற்காக வியாழக்கிழமை காலையில் சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றார். நடைமேடையில் காத்திருந்தபோது எதிர்பாராத விதமாக நினைவிழந்து கீழே விழுந்தாராம்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலர் தமயந்தி, காந்தீபனை மீட்டு ரயில் நிலைய வளாகத்தில் உள்ள தனியார் அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உயர் ரத்த அழுத்தம் காரணமாகஅவர் நினைவிழந்தாகவும், சிகிச்சைக்குப்பிறகு, நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.