மூளை செல்கள் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இரண்டரை வயது குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகவும் சிக்கலான அந்த சிகிச்சைக்குப் பிறகு தற்போது அக்குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, குளோபல் மருத்துவமனையின் நரம்பியல் துறை தலைவர் டாக்டர் தினேஷ் நாயக் கூறியதாவது:
புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தைக்கு பிறவியிலேயே மூளை செல்களின் வளர்ச்சியில் குறைபாடு இருந்தது. இதன் காரணமாக அக்குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் அதன் வளர்ச்சி தடைபடக் கூடிய நிலை உருவானது.
அக்குழந்தையை குளோபல் மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதித்ததில், மூளை செல்களில் மின்னோட்ட பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, டாக்டர் ரவிமோகன் ராவ், டாக்டர் நிஜால், டாக்டர் அருள் ஆகியோர் அடங்கிய அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் குழு, அக்குழந்தைக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டது. சுமார் 8 மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் மூளை சார்ந்த மின்னோட்ட பிரச்னைகள் சரி செய்யப்பட்டது. தற்போது அக்குழந்தைக்கு வலிப்பு பிரச்னையோ அல்லது அதுசார்ந்த நோய்களோ இல்லை என்றார் அவர்.