சமரசத் தீர்வு மூலம் நீதிமன்றங்களின் பணிச்சுமை குறையும் என்றார், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், லோக் ஆயுக்த உறுப்பினர் தேர்வுக் குழுத் தலைவருமான கே.வெங்கட்ராமன்.
சென்னையை அருகே சேலையூர் பாரத் சட்டக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிலரங்கில், பங்கேற்று "பிரச்னைக்குரிய வழக்குகளுக்கான இசைவுத் தீர்வு' என்ற தலைப்பில் மேலும் அவர் பேசியது:
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 3.3 கோடியாக உள்ளது. அதில், உயர்நீதிமன்றங்களில் 43 லட்சம் வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் 58 ஆயிரம் வழக்குகளும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
கடந்த 1996-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட இசைவு, சமரசத் தீர்வுச் சட்டம் மூலம் பல ஆண்டுகளாத் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்த வழக்குகள், இருதரப்பு சமரச நடவடிக்கை மூலம் தீர்வு காணப்படுகின்றன. பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள அயோத்தி நிலப் பிரச்னையை, உச்சநீதிமன்றம் சமரசத் தீர்வுக்கு உட்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
வழக்குரைஞர்கள் லோக் ஆயுக்த சட்டம் உள்ளிட்ட பொதுமக்கள் நலன் காக்கும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். இதில், தேசிய சமரசத் தீர்வு மையத் தலைவர் அனில் சேவியர், ஆலோசகர் கே.எஸ்.சர்மா, மண்டல இயக்குநர் இராம் மஜீத், கல்லூரி முதல்வர் எஸ்.கஜேந்திரராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.