சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட வேட்பாளர்களின் விளம்பரங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என மாவட்டத் தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜி.பிரகாஷ் புதன்கிழமை தெரிவித்தார்.
சென்னை மாவட்டத்தின் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், பெரம்பூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலுக்காக பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் அரசியல் கட்சியினர், வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்கிடவும், நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தேர்தல் குறித்த செய்திகள், விதிமீறல்கள் ஆகியவற்றைக் கண்டறியவும் ஊடகச் சான்று, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை மாவட்டத் தேர்தல் அலுவலர் ஜி.பிரகாஷ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதுவரை இந்த மையத்துக்கு வந்த 11,197 அழைப்புகளுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் ஜி.பி.எஸ் கருவி உதவியுடன் 48 பறக்கும் படை குழுக்கள், 48 நிலைக் கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சிவிஜில் செயலி மூலம் வரும் தேர்தல் தொடர்பான புகார்களும், அரசியல் கட்சி, வேட்பாளர்களின் விளம்பரங்களும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன என்றார்.