சென்னையில் மாணவர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக, டிப்ளமோ பயிற்சி மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சேப்பாக்கம் வெங்கடாச்சலம் தெருவைச் சேர்ந்தவர் கு.திருஞானம் (42). இவர், சேப்பாக்கத்தில் டிப்ளமோ பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தில் 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தை திருஞானம் முறையாக நடத்தாமல் இருந்துள்ளார்.
பயிற்சி மையத்துக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்காமலும், பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமலும் இருந்துள்ளார். இதனால் அங்கு கடந்த இரு மாதங்களாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறவில்லை. இதன் விளைவாக அந்த பயிற்சி மையம் முடங்கியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், திருஞானத்திடம் முறையீட்டுள்ளனர். ஆனால் அவர், அதன் பின்னரும் பயிற்சி மையத்தை சரியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, திருஞானத்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திருஞானம், மாணவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்திருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.