மக்களவைத் தேர்தலையொட்டி, சென்னையில் நடைபெற்ற வாகனச் சோதனையில் சனிக்கிழமை ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்காகவும், வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதைத் தடுக்கவும் சென்னையில் 77 பறக்கும் படைகள், 77 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள், சென்னை முழுவதும் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் குழுக்கள் ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை, பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றன. இந்நிலையில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே பறக்கும் படையினர் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். இதில், அந்த வாகனத்தில் ஆவணமின்றி ரூ.55 லட்சம் கொண்டு செல்லப்படுவதும், அந்த பணம் டாஸ்மாக் மதுபானக் கடையில் வசூல் செய்யப்பட்ட பணம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள், அந்த பணத்தை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதேபோல ஆலந்தூர் அருகே நடத்தப்பட்ட வாகனச் சோதனையில், ஒரு காரில் ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட்சத்தை போதிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இவ்வாறு சென்னை முழுவதும் சனிக்கிழமை மட்டும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என காவல் துறையினர் தெரிவித்தனர்.