குஜராத் மாநிலம், வாபி நகரில் அகில இந்திய அளவில் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.
ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்ற மண்ணிவாக்கம் ஸ்ரீநடேசன் வித்யாசாலா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8 மாணவ, மாணவிகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
11 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் மாணவர் கிஷோர் தங்கம், மாணவி பவதாரிணி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
14 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான போட்டியில் மாணவர் பிராஜித், மாணவிகள் பி.கே.காவ்யா, நேத்ரா ஆகியோர் தங்கமும், தீபக், மதுனிஷா ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
17 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் திவாகர் வெண்கலம் வென்றார்.
பதக்கங்கள் வென்று திரும்பிய மாணவ, மாணவிகள், பயிற்சியாளர்கள் ராஜ்குமார், ஜெ.ஸ்ரீதேவி ஆகியோருக்கு பள்ளித் தாளாளர் என்.ராமசுப்ரமணியன், முதல்வர் காயத்ரி ராமச்சந்திரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து பாராட்டினர்.