சென்னை விமான நிலையத்தில், ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொழும்புலிருந்து வந்த 4 பேரிடம் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் முகமது கானி என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 535 கிராம் அளவிலான தங்கம் மலக்குடலில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடமிருந்து 25 கிராம் தங்க மோதிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கும்பலைச் சேர்ந்த அப்பாஸ், மைதீன், முகமது ரபீக் ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்களது மலக்குடலில் மறைத்து வைத்திருந்த தங்கம் மற்றும் அப்பாஸிடம் இருந்து 9 கிராம் தங்கச் சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கொழும்புவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த கற்பகம், ஷமீன் பேகம், நாகூர் அம்மா, ஸ்ரீமதி, ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களது மலக்குடலில் மறைத்து வைத்திருந்த தங்கம் மற்றும் 5 தங்க மோதிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த 9 பேரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான 3.08 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.