சென்னையில் கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக மாற்றுத் திறனாளி கைது செய்யப்பட்டார். அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம், பொருள்கள் திருடப்பட்டு வந்தன. தனிப்படையினர், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து இந்த திருட்டு வழக்குகளில் அரியலூர் மாவட்டம் பழமலைநாதபுரத்தைச் சேர்ந்த சிவா (34) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் பேச இயலாத மாற்றுத் திறனாளியாவார்.
கடத்தப்பட்ட ரூ.60 லட்சம் குங்குமப்பூ பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான, கடத்தி வரப்பட்ட ஈரானிய குங்குமப்பூவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
விமான நிலைய வரவேற்பறையில் சந்தேகப்படும்படியான ஒரு நபரின் நடவடிக்கையைக் கண்காணித்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அதில் ரூ.60 லட்சம் மதிப்பிலான 31 கிலோ எடையுள்ள ஈரானிய குங்குமப் பூ பறிமுதல் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து இதை கடத்தி வந்த பயணி சாகுல் ஹமீதை கைது செய்தனர்.