சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி தகவல் தொழில்நுட்பக் கல்வி படித்து வந்த ஜார்க்கண்ட் மாநில மாணவர் அனில் செளத்ரி (19) இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்து வந்த நான்காம் ஆண்டு மாணவி அனுப்பிரியா 10- வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
உயிரிழந்த இருவரது உடல்களையும் மறைமலை நகர் போலீஸார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரு மாணவர்களின் தற்கொலை குறித்து அதிர்ச்சியும், வருத்தமும் தெரிவித்து, பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்கலைக்கழக வளாகத்தில் இரு துரதிருஷ்டமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் பயன்பெறும் வகையில் 24 மணிநேரமும் வழிகாட்டி உதவ ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவப் பிரிவில் போதிய ஆலோசனை, மருத்துவ உதவி வசதிகள் பெற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் அடிக்கடி தொடர்பு கொள்ளவும், பிள்ளைகளின் கல்வி மற்றும் நிலை குறித்து ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவி பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.