தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 16-ஆவது சிறப்பு மருத்துவப் புத்தகக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.
ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளிலான புத்தகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. வரும் 8-ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
புத்தகக் கண்காட்சியில் மருத்துவம், இந்திய மருத்துவம், பல் மருத்துவம் சார்ந்த பல நூல்கள் உள்ளன. குழந்தைகள் நலன், மன நலம் அறுவைச் சிகிச்சை, மயக்க மருந்தியல், கதிர் வீச்சியல், மூட்டு சிகிச்சை போன்ற பிரிவுகள் மட்டுமன்றி சிறப்புப் பிரிவுகளான நெஞ்சக சிகிச்சை, தண்டுவட சிறப்பு அறுவைச் சிகிச்சை, இரைப்பை குடல் உயர் அறுவைச் சிகிச்சை, சிறுநீரகவியல், மூளை நரம்பியல் உள்ளிட்ட தலைப்புகளிலான நூல்களும் இடம் பெற்றுள்ளன.
இந்திய மருத்துவ முறையில், சித்த மருத்துவ நூல்கள் மற்றும் ஜெர்மானிய மருத்துவ முறையான ஹோமியோபதி மருத்துவ நூல்களும் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
உடற்கூறியியல் மற்றும் நோய்கூறியியல் துறைகளில் அன்டீரியஸ் வெசாலியஸ் என்ற பெயர் வெகு பிரபலம். தற்போதைய பெல்ஜியம் மற்றும் கிரேக்க நாட்டு பகுதிகளில் வாழ்ந்த அவர், 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சியாளர். அவர் மனித உடற்கூறியியல் பற்றி விரிவாக லத்தீன் மொழியில் எழுதிய நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு இரண்டு தொகுப்புகளாக வெளியிடப்பட்டன. அவையும் புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மருத்துவ நூல்களை வெளியிடும் 6 முக்கிய பதிப்பாளர்களின் புத்தகங்கள் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.
25 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரையிலான சிறப்புத் தள்ளுபடியுடன் இங்கு நூல்கள் கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.