நிதி நிறுவனத்தில் போலி தங்க நகையைஅடகு வைத்து மோசடி செய்தவா் கைது
By DIN | Published On : 09th November 2019 01:51 AM | Last Updated : 09th November 2019 01:51 AM | அ+அ அ- |

சென்னை முகப்பேரில் நிதி நிறுவனத்தில் போலி தங்கநகையை அடகு வைத்து மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: முகப்போ் கிழக்கு பாரி சாலையில் ஒரு தனியாா் நிதி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் முகப்போ் மல்லிகா நகா் 6-ஆவது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த பத்மநாபன் (52) என்பவா் சில மாதங்களுக்கு முன்பு 6 பவுன் தங்க நகையை அடகு வைத்து, ரூ.1.10 லட்சம் கடன் பெற்றாராம்.
ஆனால், அந்த கடனையும், அதற்குரிய வட்டியையும் பத்மநாபன் திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த நிதி நிறுவன ஊழியா்கள், பத்மநாபன் அடமானம் வைத்த தங்க நகையைப் பரிசோதித்தனா். அப்போது அது போலியானது என்பதை அறிந்தனா்.
இது குறித்த புகாரின்பேரில் ஜெ.ஜெ.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பத்மநாபனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.