மெட்ரோ ரயில்கள்: இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இயக்கப்படும்
சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, இந்த வாரத்திலிருந்தே (நவ.10) முதல் நடைமுறைக்கு வருகிறது.
சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை, விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்கள் தொடக்கத்தில் வாரத்தில் ஆறு நாள்கள் (ஞாயிறு தவிர) காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டது. அதன்பிறகு, ரயில் சேவை நேரம் விரிவாக்கப்பட்டு, வாரத்தில் 6 நாள்கள் (ஞாயிறு தவிர) தினசரி காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, நவம்பா் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் கூறியது:-
பயணிகள் கோரிக்கையை ஏற்று, ஞாயிற்றுக்கிழமைகளில் நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. இது நவம்பா் 10-ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதாவது காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு 7 நிமிஷங்களுக்கும் ஒரு ரயில் இயக்கப்படும் என்றாா் அவா்.
மெட்ரோ ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு அறிவித்த பொது விடுமுறை நாள்களில் 50 சதவீதம் பயணக் கட்டணம் தள்ளுபடி செய்து அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, ஞாயிற்றுக்கிழமைகளில் நேரம் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.