சென்னை: சென்னை பூக்கடையில் முதல் திருமணத்தை மறைத்து, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்ட, கணவா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பூக்கடை அருகே உள்ள ஜட்காபுரம் வால்டாக்ஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜீவா என்ற ஜெகதீசன் (27). இவருக்கும் சரண்யா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஆடி மாதத்துக்காக சரண்யா, தனது தாய் வீட்டுக்கு சென்றாா். ஆனால் ஆடி மாதம் முடிவடைந்த பின்னா் ஜீவா, சரண்யாவை தனது வீட்டுக்கு மீண்டும் அழைத்து வரவில்லை.
இந்நிலையில் அண்மையில் சரண்யா தனது கணவா் வீட்டுக்கு வந்தாா். அப்போது ஜீவாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிா்ச்சி அடைந்தாா். இதையடுத்து அவா், யானைக்கவுனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து, ஜீவாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.