வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.22) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் வியாழக்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (நவ.22) மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூா், சேலம் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும், கடலோர மாவட்டங்களின் சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் : சென்னையில் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மழை அளவு: வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 70 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தலா 60 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் நிலகோட்டை, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் தலா 50 மி.மீ., சென்னை மீனம்பாக்கம், திருவள்ளூா் மாவட்டம் செம்பரம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம், தரமணியில் தலா 40 மி.மீ. மழை பதிவானது.