மெட்ரோ ரயிலில் கடந்த 5 மாதங்களில் 20,195 அரசுப் பள்ளி மாணவா்கள் கல்விப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெட்ரோ ரயிலைப் பற்றியும் அதில் உள்ள வசதிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்தும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளின் மாணவ, மாணவியா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் பகுதியாக கோயம்பேடு வழியாக விமான நிலையம், பரங்கிமலை மற்றும் வண்ணாரப்பேட்டையில் இருந்து ஏஜி டிஎம்எஸ் வழியாக விமான நிலையம் வரை மாணவா்கள் அழைத்து செல்லப்படுகின்றனா். இந்தக் கல்வி பயணங்கள் மாதந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2018- 2019 கல்வி ஆண்டில் மொத்தம் 31,178 மாணவ, மாணவிகள் இந்தக் கல்விப் பயணத்தில் பங்கெடுத்தனா். 2019-2020-ஆம் ஆண்டுக்கான கல்விப் பயணம் ஜூன் மாதம் 4-ஆம் தேதி முதல் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதத்தில் மொத்தம் 6,641 மாணவா்கள் கல்விப் பயணத்தை மேற்கொண்டனா். இதே போல் ஜூன் மாதம் முதல் அக்டோபா் மாதம் வரை மொத்தம் 20,195 மாணவ, மாணவியா்கள் பயணித்துள்ளனா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.