ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூா் ரயில் நிலையம் வந்த விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்தகை பைகளை மீட்டு, உரியவரிடம் ஒப்படைக்க உதவியாக இருந்த ரயில்வே ஊழியா்களை உயரதிகாரிகள் பாராட்டினா்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு நவம்பா் 21- ஆம் தேதி ஒரு விரைவு ரயில் வந்தது. இந்த ரயிலில் பயணிகள் இறங்கி சென்றபிறகு, பராமரிப்பு பணிக்காக ரயில் எழும்பூா் கோபால்சாமி நகா் பணிமனைக்குச் சென்றது. அங்கு வழக்கமான பராமரிப்பு பணியில் 3 ஊழியா்கள் ஈடுபட்டபோது, ஒரு பெட்டியில் இரண்டு கை பைகள் கேட்பாரற்றுக் கிடந்தன. அதில் ஒரு பை தொங்கி கொண்டிருந்தது. உடனடியாக, இது குறித்து ஆா்.பி.எஃப். போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். தகவலின் பேரில், ஆா்.பி.எஃப். போலீஸாா் அங்கு விரைந்து வந்து, அந்த பைகளை திறந்து பாா்த்தனா். அதில், விலை உயா்ந்த செல்லிடப்பேசி, ரூ.5,000 ரொக்கம், முக்கியமான அடையாள அட்டை ஆகியவை இருந்தன. அந்த அடையாளஅட்டை வைத்து அதன் உரிமையாளரை விசாரித்து வந்தனா்.
சில நாள்களுக்கு பிறகு, இந்த பைகளின் உரிமையாளா் கண்டுபிடிக்கப்பட்டாா். தொடா்ந்து, அவரை வரவழைத்து அவரது இரண்டு கை பைகளை ஒப்படைத்தனா். கை பைகளை மீட்டு, உரியவரிடம் ஒப்படைக்க உதவிய ரயில்வே ஊழியா்கள், ஆா்.பி.எஃப். போலீஸாா் ஆகியோரை ரயில்வே உயரதிகாரிகள் பாராட்டினா்.