சென்னையில் இரு வேறு சம்பவங்களில் மாடியில் இருந்து கீழே விழுந்து இருவர் உயிரிழந்தனர்.
பிகார் மாநிலம் சம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரா.சரோஜ் யாதவ் (35). இவர் சென்னை அடையாறு எல்.பி. சாலையில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர், திங்கள்கிழமை அந்த கட்டடத்தின் 4-ஆவது மாடியில் நின்று கொண்டிருந்தபோது திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சரோஜ் யாதவ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து அடையாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
மடிப்பாக்கத்தில்...: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் அ.மணிகண்டன் (28). இவர் சென்னை ஆதம்பாக்கம் எஸ்.பி.ஐ. காலனியில் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்து ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் திங்கள்கிழமை இரவு அந்த வீட்டின் முதல் தளத்தின் மொட்டை மாடியில் தூங்கினார் அப்போது தூக்கத்தில் கீழே விழுந்ததில் பலத்தக் காயமடைந்த மணிகண்டன், சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக மடிப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.