சென்னை விமான நிலையத்தில் ரூ.87 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒரு பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை விமான நிலையத்துக்கு துபையில் இருந்து வந்த ரபியா, வெள்ளை நயினா முகமது, ரஹ்மத் அலி, ஷேக் முகமது, சிவச்சந்திரன் ஆகியோரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ரபியாவின் உடைமையில் இருந்து 595 கிராம் தங்கத்தையும், மீதமுள்ள நால்வரின் மலக்குடலில் மறைத்து வைத்திருந்த 1.35 கிலோ எடையுள்ள தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் ரியாத்தில் இருந்து வந்த தமிர் என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 100 கிராம் தங்கம் சிக்கியது. இதன்மூலம் மொத்தம் ரூ.87.6 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரபியா கைது செய்யப்பட்டார்.