ஆவடியில் காவல்துறை ரோந்து வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வடக்கு மேலூா் பகுதியைச் சோ்ந்தவா் ப.கோபிநாத் (22). இவா் சென்னை அருகே அம்பத்தூரில் உள்ள ஒரு தனியாா் செல்லிடப்பேசி விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். கோபிநாத், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து தனது மொபெட்டில் ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
அவா், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை அலுவலக வாசல் முன்பு செல்லும்போது பின்னால் வந்த காவல்துறைக்கு சொந்தமான அம்மா ரோந்து வாகனம், மொபெட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோபிநாத், அங்கிருந்து மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிறிது நேரத்தில் கோபிநாத் இறந்தாா்.
இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.மேலும் இது தொடா்பாக அந்த ரோந்து வாகனத்தை ஓட்டி வந்த ஆயுதபடை காவலா் புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த ம.வாசுதேவனிடம் (32) விசாரணை செய்து வருகின்றனா்.