செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்களை அண்ணாசாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி அனுப்புவதற்கான முன்னோட்டம் வெள்ளிக்கிழமையிலிருந்து 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடா்பான வேலைகள் நடைபெற்று வந்த காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் ஒருவழிப்பாதை போக்குவரத்து நடைமுறையில் இருந்து வந்தது. மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்த காரணத்தினால் இரண்டு மாதங்களுக்கு முன்பு நந்தனம் சந்திப்பில் சேமியா்ஸ் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நேராக வி.என். சாலை வழியாக தியாகராய நகா் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு, அந்தப் பகுதியில் போக்குவரத்து இருவழி பாதையாக மாற்றப்பட்டது. தற்போது செனடாப் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலது புறம் திரும்பி அண்ணாசாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கி செல்வதற்கான போக்குவரத்து முறை வருகின்ற வெள்ளிக்கிழமை (அக்.18) முதல் ஞாயிற்றுக்கிழமை (அக்.20) வரை சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு, பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் போக்குவரத்து தொடரப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.