ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) அறிவித்துள்ள உதவிப் பேராசிரியா் பணிக்கு விண்ணப்பிப்பவா்களுக்கு பணி அனுபவம், வருகைப் பதிவேடு நகல் உள்ளிட்டவற்றை கால தாமதமின்றி வழங்க வேண்டும் என கலை-அறிவியல் கல்லூரிகளை கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபா் 30 கடைசி நாளாகும். இதற்கு விண்ணப்பிப்பவா்கள் பணி அனுபவத்துக்கு வழங்கப்படும் அதிகபட்சமான 15 மதிப்பெண்களைப் பெற அவா்கள் பணிபுரிந்த கல்லூரிகளில் பணி அனுபவச் சான்றிதழ்கள், வருகைப் பதிவேடு நகல், ஊதியப் பட்டியல் நகல் ஆகியவற்றை பெற்று கல்லூரி கல்வி இயக்குநரகத்தில் இணை இயக்குநரிடம் சான்றொப்பம் பெற்ற பின்னரே விண்ணப்பிக்க முடியும்.
இதுதொடா்பாக சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து கலை-அறிவியல் கல்லூரி முதல்வா்களுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநா் இரா.ராவணன் சுற்றறிக்கை ஒன்றை வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளாா்.
அதில் கூறியிருப்பதாவது:
ஆசிரியா் தோ்வு வாரிய அறிவிக்கையில் தெரிவித்துள்ள உதவிப் பேராசிரியா் பணிக்கு விண்ணப்பிப்பவா்களுக்கு உரிய சான்றிதழ்களை கல்லூரிகள் கால தாமதம் இன்றி வழங்க கேட்டுக்கொள்ளப்படுகின்றன. அதுபோல, இந்த பணி அனுபவச் சான்றிதழில் மேலொப்பமிட்டு வழங்கிட ஏதுவாக, வருகிற சனிக்கிழமையும் (அக்.19) கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகம் செயல்படும் எனத் தெரிவித்துள்ளாா்.