பச்சையப்பா அறக்கட்டளைக்கு சொந்தமான 4 கல்லூரிகளுக்கான முதல்வர்களைத் தேர்வு செய்ய நீதிபதி என்.பால்வசந்தகுமாரை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு பச்சையப்பா கல்லூரியின் முதல்வர் பதவிக்கு தேர்வு நடத்தப்பட்டு, என்.சேட்டு என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால் இந்தத் தேர்வில் பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் மற்றும் தனியார் கல்லூரி ஒழுங்குமுறை விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. எனவே அவரது நியமனம் மற்றும் இது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் , கல்லூரி முதல்வர் நியமனத்தை ரத்து செய்ததோடு, இந்தத் தேர்வில் பெரும் தொகை லஞ்சமாக கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளதால், லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், முதல்வர் நியமனத்தை ரத்து செய்தும், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும் எனும் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம். மேலும் பச்சையப்பா அறக்கட்டளைக்கு சொந்தமான 4 கல்லூரிகளுக்கு முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.பாலவசந்தகுமாரை நியமிக்கிறோம். இவர் தேர்வுக்குழு அமைத்து 3 மாதத்துக்குள் முதல்வர்களை தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறினர்.