தொடர் மழை: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை  காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் திங்கள்கிழமை பெய்த மழையில் அண்ணாநகரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
சென்னையில் திங்கள்கிழமை பெய்த மழையில் அண்ணாநகரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.


சென்னையில் பெய்து வரும் தொடர் மழை  காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது. திங்கள்கிழமை வேலை நாள் என்பதால் புறநகர்ப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கையும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
இதனால்,  அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை,  அண்ணா சாலை, வடபழனி, கிண்டி ரயில் நிலைய மேம்பாலம், கோடம்பாக்கம் மேம்பாலம்,  நந்தனம் சிக்னல், அண்ணா நகர்- கோயம்பேடு சாலை, போரூர் - பூந்தமல்லி சாலை, ஜிஎஸ்டி சாலை,  வில்லிவாக்கம், ராயபுரம், திருவொற்றியூர் ஆகிய முக்கியப் பகுதிகள் மற்றும் சாலைகளில் திங்கள்கிழமை காலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பள்ளி மற்றும் பணிக்குச் செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.  திங்கள்கிழமை தொடர்ந்து மழை   பெய்ததால் மாநகரில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது.  அதேபோல், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்த ஆம்னி உள்ளிட்ட பேருந்துகளின்  எண்ணிக்கையும் திங்கள்கிழமை அதிகமாக இருந்ததால், புறநகர்ப் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம்,  வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளியையொட்டி, புத்தாடை உள்ளிட்ட பொருள்கள் வாங்க தியாகராய நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழையையும் பொருட்படுத்தாமல் அதிகமானோர் குவிந்தனர். இதனால், அப்பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மழை நீர் அகற்றம்: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சாலைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 60 உயரழுத்த பம்புகள், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற 570 மோட்டார் பம்புகள், 130 ஜெனரேட்டர்கள், 371 மரம் அறுவை இயந்திரங்கள், 6 மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை பெய்த மழையால் நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை சுரங்கப் பாதைகள் உள்பட 14 இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்த இடங்களில் உள்ள மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com