ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை கொண்டாடத் தயாராகி வருகின்றனர். வெளியூர்களில் வேலை பார்க்கும் நபர்கள் ஆர்வ மிகுதியால் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ரயில்களில் பட்டாசுக்களை எடுத்து செல்கின்றனர். இதனால், ரயில்களில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து, ரயில்களில் பட்டாசுகளை எடுத்து செல்வதைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புபடை போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால், மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே போலீஸார் எச்சரித்துள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பயணிகளுக்கு துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தனர். மேலும், மாதிரி பட்டாசுகளையும் காட்சிக்கு வைத்திருந்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்ட்ரல் ரயில்வே காவல் ஆய்வாளர் தாமஸ் ஜேசுதாசன் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சிவனேசன் கலந்து கொண்டனர்.
ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ரயில்களில் சோதனை செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். ரயில்களில் பயணிகள் பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது. பட்டாசுகளை எடுத்து சென்றால், ரயில்வே சட்டம் 164-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது, ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால், மூன்றாண்டு சிறை, ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனை பெற நேரிடும் என்றனர்.