விநாயகர் சதுர்த்தியையொட்டி, வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.
சென்னையை அடுத்த வண்டலூரில் வனத்துறை கட்டுப்பாட்டில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் யானை, புலி, சிங்கம், சிறுத்தை, கரடி, பறவைகள், பாம்பு உள்ளிட்ட ஊர்வனவைகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இந்தப் பூங்காவுக்கு வார நாள்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், விடுமுறை நாள்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என மாதத்துக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்துசெல்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தி: வண்டலூர் பூங்காவில் பிரகதி, ரோகிணி என்ற இரண்டு யானைகள் பராமரிக்கப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தியையொட்டி, திங்கள்கிழமை அந்த யானைகளை குளிக்க வைத்து, மாலைகள் அணிவிக்கப்பட்டு கரும்பு, தேங்காய், வெல்லம், வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட யானைகளை பூங்காவுக்கு வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
திங்கள்கிழமை அரசு விடுமுறை என்பதால் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூங்காவுக்கு வந்திருந்ததாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் பாம்புப் பண்ணையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.