தேசிய வருவாய் வழி திறனாய்வு படிப்பு உதவித் தொகை தேர்வுக்கு (என்எம்எம்எஸ்) வரும் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளதால், மாணவர்களை இந்தத் தேர்வுக்கு தயார்படுத்துமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்க, ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சம் இருப்பதுடன், ஏழாம் வகுப்பு இறுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு வரும் 26-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. முந்தைய வகுப்பு பாடத்திட்டங்கள் மற்றும் பொது அறிவு சார்ந்த கேள்விகள், இந்தத் தேர்வில் இடம்பெறும். தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வீதம், பிளஸ் 2 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான தேர்வு நவ.4-ஆம் தேதி நடைபெறும்.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, என்எம்எம்எஸ் தேர்வு குறித்து எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.