தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநில நகர்ப்புற இயக்கம் ஆகியவை சார்பில் மதராசப்பட்டினம் விருந்து என்ற பெயரிலான உணவு - கலாசார திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அதனை தொடக்கி வைக்கிறார். சென்னை தீவுத் திடலில் நடைபெறும் உணவு திருவிழாவானது வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) வரை மூன்று நாள்களுக்கு நடைபெறவிருக்கிறது.
அதற்காக பல்வேறு உணவு நிறுவனங்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல வகையான உணவுப் பதார்த்தங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. குறிப்பாக, பாரம்பரிய உணவுகள், மூலிகை உணவுகள் உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, உணவுத் திருவிழாவுக்கான ஏற்பாடுளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியதாவது:
நமது கலாசாரத்தோடு இரண்டறக் கலந்திருக்கும் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும் பல உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன என்றார் அவர்.
அமைச்சர் சரோஜா பேசுகையில், சமூக நலத்துறை சார்பில் பிரத்தியேக செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக தமிழகம் 2023-க்குள் உருவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.