சென்னை எழும்பூர் அரசு தாய், சேய் நல மருத்துவமனையில் சுகப் பிரசவத்துக்காக கர்ப்பிணிகளுக்கு யோகா மற்றும் உடற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவங்கள் நடைபெறுவதற்காக கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை எழும்பூர் அரசு தாய் -சேய் நல மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்திலேயே இந்த மருத்துவமனையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு சுமார் 60 பிரசவங்கள் நடைபெறுகின்றன.
யோகா பயிற்சி அளிப்பதால் இந்த மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் பயன்பெறுவார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ஷோபா கூறியதாவது:
இந்த மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகள் மிகவும் அபாயம் மிகுந்த காலத்தில் வருகின்றனர். கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளிப்பதால் சிசேரியன் அதிகளவில் குறையும். கர்ப்பிணிகளுக்கு யோகாவுடன் எந்த மாதிரியான உணவு சாப்பிட வேண்டும். காற்றை எப்படி சுவாசிக்க வேண்டும் மற்றும் சில உடற்பயிற்சிகளும் கற்றுக் கொடுக்கப்படும்.
இதன்மூலம் கர்ப்பப்பையில் இருந்து தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு ரத்த போக்குவரத்து அதிகரிக்கும். குறைப்பிரசவம், எடை குறைவு, வளர்ச்சிக் குறைவாக குழந்தைகள் பிறப்பது தடுக்கப்படும்.
கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். குழந்தையின்மைக்கு உடல்பருமன் முக்கிய காரணமாக உள்ளது. பெண்களுக்கு உடல்பருமனை குறைக்கவும் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்றார்.