போக்குவரத்து நெரிசல் நிறைந்த சென்னை அண்ணா சாலையில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் தனது ஓட்டுநருடன் காரில் சொந்த வேலையாக வெள்ளிக்கிழமை சென்னை வந்துள்ளார். அந்த கார், அண்ணாசாலையில் உள்ள பழைய ஆனந்த் தியேட்டர் எதிரில் சென்ற போது திடீரென காரில் இருந்து புகை வெளியேறியது.
இதையடுத்து, காரை ஓரமாக நிறுத்திவிட்டு புகையைக் கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர். இருப்பினும் எதிர்பாராத விதமாக கார் தீப்பிடித்து எரிந்தது. மளமளவென தீ பரவியதால் கார் முழுவதும் தீயில் கருகி நாசமானது. தீ விபத்து காரணமாக அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து போக்குவரத்து காவலர்கள் உடனடியாக போக்குவரத்தை சீர்செய்தனர். தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.