நாட்டில் இருந்து தகவல் தொழில்நுட்ப சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், "இந்தியா சாப்ட்' என்னும் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாடு ஹைதராபாதில் அடுத்த ஆண்டு மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் "இந்தியா சாப்ட்' தலைவர் நளின்கோலி கூறியது:
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஏற்றுமதி சேவைகளை அதிகரிக்கும் வகையில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 60 நாடுகளில் இருந்து 500 வெளிநாட்டினர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவில் உள்ள 250 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. 50 வெளிநாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் ஐ.டி. பொருள்கள் காட்சிப்படுத்தப்படும்.
தகவல் தொழில்நுட்பப் பிரிவில் புதியதாக தயாரித்த பொருளையோ அல்லது சேவையை ஏற்றுமதி செய்யவோ இந்தக் கண்காட்சி உதவியாக இருக்கும்.
மேலும், புதிய தொழில்நுட்பத்தைத் தெரிந்த கொள்ளவும் இந்தக் கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தை சேர்ந்த சிறு, நடுத்தர ஐ.டி. நிறுவனங்களுக்கு இது உதவியாக இருக்கும்.
சிறிய நாடுகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள், அவர்களுக்கு ஏற்ற சிறிய நிறுவனங்களைத் தேர்வு செய்ய இந்த கண்காட்சி நல்ல வாய்ப்பாகும்.
இந்தக் கண்காட்சியில் தகவல் தொழில்நுட்பத்தில் புதுமை கண்டுபிடிப்புகள், புதிய தொழில்நுட்பம் காட்சிப்படுத்தப்படும். இதுதவிர, ஐ.டி. துறையில் தற்போதுள்ள புதியபோக்கு அறிந்துகொண்டு, அதற்கு ஏற்ப மேம்படுத்தி கொள்ள இந்த கண்காட்சி உதவியாக இருக்கும் என்றார் அவர்.