சென்னையில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்து வருவதையொட்டி, முன்னேற்பாடுகள் குறித்து பெருநகர காவல்துறை ஆணையர் வியாழக்கிழமை செய்தனர்.
இது குறித்த விவரம்:
சென்னையில் கடந்த இருந்த நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் குளம்போல மழைநீர் தேங்கியது. சில இடங்களில் மரம் முறிந்து விழுந்தது. மண்ணடியில் வீடு இடிந்து விழுந்து ஜெரீனா என்ற பெண் இறந்தார்.
இந்த மழை இன்னும் 3 நாள்கள் நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மழைக்கான முன்னேற்பாடுகளை செய்யும் வகையில், வேப்பேரியில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் தலைமை வகித்தார். கூட்டத்துக்கு கூடுதல் ஆணையர்கள் ஏ.அருண், ஆர்.தினகரன், பிரேம் ஆனந்தி சின்ஹா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதேபோல பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு படையினர், மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மழைக்காக செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பருவமழையை எதிர்கொள்ள முழு அளவில் தயாராக இருப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.